இரண்டு பணவெடை அக்கரகாரத்தைத் தட்டி வாயிலிட்டு அடக்கிச் சுரக்கும் உமிழ்நீரை சுவைத்து விழுங்கினால் நாவின் அசதி, பல்வலி, உண்ணாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல், தாகம் முதலிய நோய்கள் போகும்...
ஒரு பலம் அக்கரகாரத்தை இடித்து ஒரு மட்பாண்டத்திலிட்டு அரை படி நீர் சேர்க்கவும்...இதை அடுப்பிலேற்றிச் சிறு தீயில் எரித்து வீசம் படியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி, கொஞ்சம்,கொஞ்சமாக வாயில்விட்டு அடக்கிக் கொப்பளித்து உமிழ்ந்துவிடவும்...இப்படி நாள்தோறும் இரண்டு, மூன்று முறை மூன்று நாட்கள் செய்தால், வாயில் உண்டான இரணம், தொண்டைப்புண், பல்வலி, பல்லசைவு ஆகியப் பிணிகள் நீங்கும்...
அக்கரகாரத்தை இடித்து எடுத்தச் சூரணத்தைத் தனியாக அல்லது வேறு பற்பொடிச் சரக்குகளுடன் சேர்த்து பற்களைத் தேய்த்துவந்தால் பற்களைப் பாழாக்கும் புழுக்கள் இறக்கும்...பற்சொத்தையும் போகும்...
இதனைச் சிறுதுண்டுகளாக்கி குழித்தைலமுறைப்படி தைலம் தயார் செய்து உணர்ச்சிக் குறைவான இடங்களில் தேய்க்க உணர்ச்சி உண்டாகும்...இந்தத் தைலத்தை ஆண்குறிக்கு இலேசாகத்தடவ தளர்ச்சி நீங்கி இன்பம் அதிகரிக்கச்செய்யும்...
அக்கரகாரச் சூரணத்தோடு சமனெடை சோற்றுப்பு சேர்த்து காடிவிட்டு அரைத்து உண்ணாக்கில் தடவ அதன் சோர்வு போகும்...நாக்கில் தடவினால் நாக்குத்தடிப்பு போகும்...இதன் தனிச்சூரணத்தை மூக்கில் ஊதினால் மூர்ச்சைத் தெளிந்து பற்கிட்டலையும் திறக்கச் செய்யும்...தாளகண்டாமுதம், அக்கரகாரமெழுகு போன்ற மருந்துகள் தயார்செய்யவும் இந்த மூலிகை உபயோகப்படுத்தப்படுகிறது