'மிராக்கிள் ஃபுரூட்' (Miracle Fruit) இதைத் தமிழில், 'அதிசயப் பழம்' என்கிறார்கள். வெள்ளரிக்காய் இனிப்பாய் இருந்தால் எப்படியிருக்குமோ, அந்தச் சுவையில்தான் இந்த அதிசயப் பழம் இருக்கும். இதைச் சாப்பிட்ட அரை மணி நேரத்திற்குப் புளிப்பு வகையான பழத்தைச் சாப்பிட்டாலும், இனிப்பாகத்தான் இருக்கும்.
உதாரணமாக, இந்தப் பழத்தை சாப்பிட்டவுடன், ஒரு எலுமிச்சம் பழத்தைச் சாப்பிடலாம். துளியும் புளிக்காது. அந்த அளவுக்கு எலுமிச்சையைக்கூட தேன்போல் இனிக்கவைக்கும் திறன்கொண்டது. மேற்கு ஆப்பிரிக்காவே இப்பழத்தின் பிறப்பிடம். தற்போது வெயில் அதிகம் உள்ள அனைத்து நாடுகளிலும் இது விளைகிறது. புளிப்புச் சுவை கொண்ட மதுவை இனிப்பாக்குவதற்கு ஆப்பிரிக்க மக்கள் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.
இத்தகைய மிராக்கிள் பழத்தை, சென்னை முகப்பேரில் வசித்துவரும் ஜஸ்வந்த் சிங் வளர்த்துவருகிறார். இதுபற்றி அவரிடம் பேசினோம். "மிராக்கிள் பழத்தின் ஒரு துண்டை வாயில் போட்டுக்கொண்டு, ஊறுகாயைச் சாப்பிட்டாலும் இனிக்கும். சர்க்கரை மற்றும் புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உணவாகச் சாப்பிட பயன்படுகிறது இந்த அதிசயப் பழம். நிறத்தில் சிவப்பாகக் காணப்பட்டாலும், நமது ஊர் புளியங்கொட்டை போலவே இருக்கும். எட்டடி உயர செடியில் கொத்துக்கொத்தாகக் காய்க்கும் இந்தப் பழத்துக்கு, சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி உண்டு. அதற்கு ஏற்றாற்போல விலையும் அதிகம்.
வெயில்பாங்கான இடங்களில் மட்டுமே வளரும். வைட்டமின் சி, வைட்டமின் கே உள்ளிட்ட சத்துகளைக் கொண்டது. உடல் பருமனைக் குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதில், இனிப்பு சுவை இருக்கிறது. ஆனால் சர்க்கரை இல்லை. சீனா, ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத உணவுப் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளிலோ, இன்னும் கூடுதலான மவுசு இருக்கிறது. இது, கடந்த 18-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பழத்துக்கு சிறப்பு சேர்ப்பது உள்ளே இருக்கும் 'மிராக்குலின்' எனும் புரதம்தான்.
இந்தப் பழத்தை சாப்பிட்ட பின்னர், எதைச் சாப்பிட்டாலும் இனிப்புத் தன்மை உடையதாக மூளையை உணரவைக்கிறது. இதனால்தான் இந்தப் பழத்துக்கு 'மிராக்கிள்' எனும் பெயரை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில், மருத்துவர்கள் நீரிழிவு நோய்க்கு இந்தப் பழங்களையும் பரிந்துரைக்கின்றனர். இந்தச் செடிகளை வீட்டிலேயே வளர்ப்பது சிறந்தது.